இலங்கை தமிழர் போராட்டம் தவறு என்று கூறிய நீதிபதியின் நீதிமன்றத்துக்கு பூட்டு!
"இலங்கைத் தமிழர்களுக்காக மேற்கொள்ளப்படும் போராட்டம் தவறு" என்று கருத்து தெரிவித்த மதுரை மாவட்ட நீதிபதியை வழக்கறிஞர்கள் கண்டித்துள்ளனர். இத்துடன் அவர் பணிபுரியும், குற்றவியல் நீதிமன்றத்துக்கு இன்று காலை 'மர்ம நபர்கள்' பூட்டு போட்டு பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் மாணவர்களின் போராட்டத்துக்கு மதுரையில் வெவ்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை விசாரித்த 4-வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராஜலிங்கம், "இலங்கைத் தமிழர்களுக்காக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவது தவறு. அதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்" என்று கருத்து தெரிவித்தார்.
நீதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்த விபரம், வழக்கறிஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. அதைத்தொடர்ந்து, இன்று காலை வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினர், நீதிபதி ராஜலிங்கத்தைக் கண்டித்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினர்.
அதில், நீதிபதி பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, நீதிபதி ராஜலிங்கம் பணிபுரியும், குற்றவியல் நீதிமன்றத்துக்கு இன்று காலை 'மர்ம நபர்கள்' பூட்டு போட்டு பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இதைச் செய்தவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. மதுரை போலீஸ் தீவிரமாக துப்பு துலக்கி வருகின்றனர்.
No comments:
Post a Comment